×

“இசையையும், பாடலையும் பிரிக்கக்கூடாது”: இளையராஜாவும், வைரமுத்துவும் என் தகப்பன்கள்.. சீமான் பேட்டி..!!

சென்னை: இளையராஜாவும் வைரமுத்துவும் என் தகப்பன்கள் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் வைரமுத்து ஆகியோர் பிரச்சனை பற்றி தான் தமிழ் சினிமா துறை பரபரப்பாக பேசிக்கொண்டு இருக்கிறது. வைரமுத்துவை வாயை பொத்திட்டு இருக்கனும் என இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் கொடுத்த பேட்டியும் சர்ச்சை ஆனது. மேலும் இளையராஜாவை தாக்கும் வகையில் வைரமுத்து போடும் ட்விட்டர் பதிவுகளும் சர்ச்சையை கொழுந்து விட்டு எரிய வைத்தது.

இந்நிலையில், அமீர் நடித்துள்ள உயிர் தமிழுக்கு திரைப்படத்தை பார்த்தபின் சென்னை நுங்கம்பாக்கத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், இளையராஜாவும், வைரமுத்துவும் என் தகப்பன்கள். ஒரு படைப்பாளியாக இளையராஜாவுக்கு ஒரு அங்கீகாரம் தேவை. இசை, பாடல் வரிகள் இரண்டுமே முக்கியம் தான்; அவற்றைப் பிரித்து பார்க்கக் கூடாது. இளையராஜா உரிமையைத்தான் கேட்கிறார்; மற்றவர்களுக்கு உரிமையை தரக்கூடாதென கூறவில்லை. இளையராஜா, வைரமுத்து பிரச்னை தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைதான். படத்தை ஒருமுறை வாங்கிவிட்டால் வாழ்நாள் முழுவதும் உரிமத்தை வைத்துக்கொள்வது சரியல்ல என்று கருத்து தெரிவித்தார்.

போலி மருத்துவர்களைத்தான் நீட் உருவாக்குகிறது:

போலி மருத்துவர்களைத்தான் நீட் உருவாக்குகிறது; அதனால் தான் நீட் தேர்வை நாங்கள் எதிர்க்கிறோம். நீட் தேர்வின் போது அணிகலன்களை அகற்றச்சொல்வது என்பது எல்லாம் இங்குதான் நடக்கிறது என்று சீமான் தெரிவித்தார்.

அமீரும் அரசியல்வாதிதான்:

இயக்குநர் அமீர் அரசியலில்தான் இருக்கிறார் என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தேர்தலில் நிற்பவர் மட்டும் அரசியல்வாதி அல்ல மக்கள் பிரச்னைக்கு நிற்பவர்களும் அரசியல்வாதிதான். அமைதிப்படை சத்தியராஜ் போன்று உயிர் தமிழுக்கு படத்தில் அமீர் நடத்துள்ளார் என்று சீமான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

The post “இசையையும், பாடலையும் பிரிக்கக்கூடாது”: இளையராஜாவும், வைரமுத்துவும் என் தகப்பன்கள்.. சீமான் பேட்டி..!! appeared first on Dinakaran.

Tags : Seaman ,Chennai ,Seeman ,Ilayaraja ,Vairamuthu ,
× RELATED புலம் பெயர்ந்த தொழிலாளர்களிடம்...